திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 10வது வார்டுக்கு உட்பட்ட பூந்தோட்ட பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவியர் டென்னிஸ், கூடைப்பந்து, இறகு பந்து போன்ற பல்வேறு விளையாட்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் நடைபயிற்சியும் செய்கின்றனர். எனவே, இங்கு நவீன கழிப்பறை அமைத்து தர வேண்டும், என்று பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், மாநகராட்சி நிதியிலிருந்து ரூ.37 லட்சத்தில் நவீன கழிப்பறை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளை மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு நேற்று தொடங்கி வைத்தார். இதேபோல், இதே மைதானத்தில் ரூ.3 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.