திருவாரூர்: திருவாரூர் அருகே பாண்டவையாற்றில் தண்ணீர் குறைந்த அளவில் செல்வதால் அதிலிருந்து பிரிந்து செல்லும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் நெல்பயிரிட்ட பகுதிகள் காய்ந்து காணப்படுகின்றது.
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல்சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு மூணாறு தலைப்பிலிருந்து பொறையாறு பாசனம், வெண்ணாறு பாசனம் என்ற 2 தலைப்புகளில் தண்ணீர் பிரித்தெடுக்கப்படுகிறது.
இதில் திருவாரூர் அருகே மாங்குடி அருகே பாண்டவையாறு பாசனத்தை நம்பி மாங்குடி, சேந்தனாங்குடி, வடகரை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக நெல்சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பாண்டவையாற்றில் தரையோடு தண்ணீர் செல்கிறது, இதனால் அதிலிருந்து புரியக்கூடிய மாங்குடி வாய்க்கால் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.