திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அலறவிட்ட திருடன்-போலீஸ் கார் சேசிங் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஒறையூரைச் சேர்ந்தவர் சசிகுமார் (40). வங்கி அதிகாரியாக உள்ளார். கடந்த 23ம் தேதி இரவு 4 பேர் கொண்ட கும்பல், இவரது வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த காரை திருடிச் சென்றது. இதுதொடர்பாக, பண்ருட்டி போலீசார் நடத்திய விசாரணையில், சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் கொள்ளையர்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கொள்ளை கும்பலை சேர்ந்த தனசேகர் உள்பட 2 பேரை மடக்கினர். மற்ற 2 கொள்ளையரும் காரின் நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டு, போலியான பதிவு எண்ணுடன் தலைவாசலுக்கு தப்பியது தெரியவந்தது. எனவே, தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.
இதுதெரிந்து இருவரும் அங்கிருந்து கள்ளக்குறிச்சி, மணலூர்பேட்டை வந்து, தச்சம்பட்டு வழியாக திருவண்ணாமலை சென்றனர். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. மணலூர்பேட்டை சாலையில் போலீசார் நேற்று காலை காத்திருந்தனர். அசுர வேகத்தில் வந்த கொள்ளையர்களின் கார், அங்கிருந்து செட்டிப்பட்டு மற்றும் பெரும்பாக்கம் சாலை வழியாக திருவண்ணாமலை நோக்கி விரைந்து, அரசு கலைக்கல்லூரியை கடந்து சென்றது. சாலை தடுப்புகளில் மோதிவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொள்ளையர்களின் காரை பின்தொடர்ந்து சுமார் 5 கி.மீ. தூரம் விரட்டிச்சென்ற போலீசார், சண்முகா அரசு பள்ளி அருகே காரை மடக்கினர். அதில் போதையில் இருந்த சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி(24), யுவராஜ்(32) ஆகியோரை கைது செய்து கடலூர் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலையில், சினிமா பாணியில் கொள்ளையர்களின் காரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்த போலீசாருக்கு, திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.