திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் குடும்ப வறுமை காரணமாக மனம் தளராமல் டிராக்டர் ஓட்டி சம்பாதிக்கும் பட்டதாரி பெண்ணுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் மணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை, வேடியம்மாள் தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஏழுமலை ஓட்டுநராகவும், வேடியம்மாள் விவசாய குழி தொழில் செய்து வரும் நிலையில் தங்கள் பிள்ளைகள் உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும் என்ற தன்நம்பிக்கையில் மகன் ராஜியை பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பும் மகள் கலை செல்வியை தனியார் கல்லூரியில் BSC கணிதமும் படிக்கவைத்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கலை முடித்த கலை செல்வி மற்றும் அவரது சகோதரர் ராஜி ஆகியோர் குடும்ப வறுமை காரணமாக மேல் படிப்பை தொடர முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். பெற்றோரின் துயரத்தை போக்க ராஜி நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வரும் நிலையில் கலை செல்வியும் தனது அப்பா மற்றும் அண்ணனை போல் டிரைவர் ஆக பயிற்சி மேற்கொண்டு ஆட்டோ வாங்கி ஓட்டினார்.
ஆனால் அதில் போதிய வருமானம் கிடைக்காததாலும் ஆட்டோ வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போனதாலும் சிரமப்பட்ட அவர் ஆட்டோவை விற்று விட்டு துணிச்சலாக விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் ஏறு உழுதல் உள்ளிட்ட விவசாய பணிகளை செய்து வருமானம் ஈட்டிவருகிறார். டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திர பணிகள் இல்லாத போது வேலையும் செய்து வரும் காலை செல்வி கல்லூரி மேற்படிப்பை தொடரவேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியுள்ளார். கல்லூரி படிப்பை தொடர விரும்பும் பட்டதாரிக்கு அரசும் தன்னார்வலர்களும் உதவி செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.