திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கிணங்க திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் நரிக்குறவர் காலனி, இருளர் காலனி மற்றும் வெண்மனம்புதூர் ஊராட்சி பகுதிகளில் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மாவட்ட அவைத்தலைவர் கே.திராவிட பக்தன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் க.அரிகிருஷ்ணன், மோ.ரமேஷ் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர்தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு அரிசி, மளிகை பொருட்கள், பெட்ஷீட், புடவை, லுங்கி ஆகியவற்றை வழங்கினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பி.கே.நாகராஜ், ஒன்றிய நிர்வாகிகள் ராஜசேகர், கொப்பூர் டி.திலீப்குமார், பிரசன்னகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், வேதநாயகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.