திருத்தணி: திருத்தணி அருகே கத்தியால் வாலிபரை வெட்டிவிட்டு 3 செல்போன்களை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருத்தணி ஒன்றியம், டி.சி.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வாசு என்பவரின் மகன் பசுபதி (26). இவர் நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் தனது நண்பர்களான சதீஷ் (24), லோகநாதன் (24) ஆகியோருடன் சாலையோரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மொபட்டில் அங்கு வந்த 3 மர்ம நபர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி பசுபதி மற்றும் அவர்களது நண்பர்கள் 2 பேரிடம் இருந்த 3 செல்போன்களை பறித்தனர். மேலும், பசுபதியை கத்தியால் இடது கை, தோள்பட்டையில் வெட்டிவிட்டு 3 பேரும் தப்பிச் சென்று விட்டனர்.
இதில் காயமடைந்த பசுபதியை சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு பசுபதி திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி 3 மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்துக்காக காத்திருந்த 3 வாலிபர்களிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். மேலும், அங்கிருந்த இரு சக்கர வாகனத்தை கீழே தள்ளிவிட்டு, அதிலிருந்து சாவியை திருடிச் சென்றுவிட்டனர். இதுகுறித்தும் திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.