திருவள்ளூர்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 – 22 மற்றும் 2022 – 23 ஆம் ஆண்டில் திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை வட்டாரங்களில் அமைக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்புகளை வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் ஆய்வு மேற்கொண்டார். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் சந்தானவேனுகோபாலபுரம், வெடியங்காடு மற்றும் ஜி.சி.எஸ்.கண்டிகை தரிசு நிலத் தொகுப்புகள் மற்றும் திருத்தணி வட்டாரத்தில் உள்ள வீரகநல்லூர் தரிசு நிலத் தொகுப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும் சந்தானவேனுகோபாலபுரம் மற்றும் வெடியங்காடு தரிசு நிலத் தொகுப்பில் தற்போது மா மற்றும் கொய்யா கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார். ஜி.சி.எஸ்.கண்டிகை தரிசு நிலத் தொகுப்பில் புதர் செடிகள் நீக்கப்பட்டு தற்போது நுண்ணீர் பாசனம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். பிறகு வீரகநல்லூர் தரிசு நிலத் தொகுப்பில் புதர் செடிகள் அகற்றப்பட்டு நில நீர் ஆய்வு மேற்கொள்ளப்ட்டு மானாவாரியில் விதைக்கப்ட்டுள்ள பயிர்களை பார்வையிட்டார். திருத்தணி வட்டார அகூர் விதை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆர்.கே.பேட்டை வட்டார விதை சுத்திகரிப்பு நிலையங்களிலும், சின்னநாகபூண்டி துணை வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் ஆர்.கே.பேட்டை வேளாண்மை விரிவாக்க மையம் ஆகியவற்றினை ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வேளாண் விரிவாக்க மையங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தென்னங்கன்றுகள், விசை தெளிப்பான், மின்கல தெளிப்பான், வரப்பு பயிர் விதை விநியோகம், தார்பாலின் மற்றும் வேளாண் பண்ணைக் கருவிகள் ஆகியவற்றின் இருப்பு மற்றும் பயனாளர்கள் பட்டியலையும் வேளாண் இணை இயக்குனர் எல்.சுரேஷ் ஆய்வு செய்தார்.