விருதுநகர், மே 5: தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால் சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட கூடுதல் நீதிபதி தெரிவித்தார். விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சூலக்கரையில் உள்ள தனியார் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலை தொழிலாளர் காப்பீடு, பெண் தொழிலாளர் பாதுகாப்பு, குழந்தைகள் பேனல், கல்வி உதவித்தொகை, நலவாரிய திட்டங்கள், குழந்தை திருமணம், விபத்து நஷ்டஈடு, சட்டப்பணிகள் குழு தொழிலாளர்கள் சட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் நீதிபதி பேசுகையில், “தொழிலாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டாயம் கட்டியிருக்க வேண்டும். தகுதி உள்ள நபராக இருந்து அரசு அலுவலகங்களில் இருந்து கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டாலோ, மறுக்கப்பட்டாலோ, நீதிமன்றங்களில் உள்ள சட்டப்பணிகள் குழு அலுவலகங்களில் மனு அளித்து தீர்வு பெறலாம்’’ என்றார். முகாமில் தொழிற்சாலை துணை இயக்குநர் ரவிக்குமார், ஒன் ஸ்டாப் சென்டர் அலுவலர் ஜோஸ்பின், தொழிலாளர் காப்பீடு அலுவலர் லட்சுமி, தொழிற்சாலை நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.