திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரமோற்சவத்தின் 10 நாள் விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும், 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை பிரமோற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு திருத்தணி முருகன் கோயிலில் இன்று காலை சித்திரை பிரமோற்சவத்தின் 10 நாள் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதைத் தொடர்ந்து மூலவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, அலங்கார மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. முன்னதாக, கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள கொடிமரத்துக்கு எதிரே வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து சித்திரை பிரமோற்சவ விழாவுக்கான கொடியேற்றினர். இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் தரன், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன், உஷா ரவி உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று முதல் வரும் 24ம் தேதி வரை (10 நாட்கள்) நடைபெறும் சித்திரை பிரமோற்சவ விழாவில் நாள்தோறும் மூலவருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் உற்சவர் சிறப்பு வாகன சேவையில் எழுந்தருளி, கோவில் மாடவீதியில் திருவீதியுலா நடைபெறுகிறது. மேலும், தமிழ் வருடப் பிறப்பான இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்து வருகின்றனர். மேலும், திருத்தணியில் அருள்மிகு சுப்பிரமணிய முருகன் கோயிலில் கோயில் நிர்வாகம் சார்பில், 1008 பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் தரன், அறங்காவலர்கள் மு.நாகன், சுரேஷ்பாபு, மோகனன், உஷா ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.