திருப்பூர்: திருப்பூர் அருகே சாய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் அருகே ஆண்டிபாளையம் குளத்தின் பின்புறம் சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் டெக்ஸ்டைல் பிராசஸ் சாய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பனியன் துணிகளுக்கு சாயம் ஏற்றும் பணி நடைபெற்று வருவது வழக்கம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் சாய தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்து தீ பிடித்து எரிந்தது.
இதனை கண்ட அருகில் இருந்த தொழிலாளர்கள் பாய்லர் தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் தீயானது மளமளவென பரவி கரும்புகை வெளியேறியது. இதனையடித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்கள் மூலம் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொழிலாளர்கள் யாரும் பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பூர் மங்களம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.