திருப்பூர்: திருப்பூரில் கடையில் ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காமாட்சி அம்மன் கோயில் வீதியில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹஜ்மத் சிங் (40) என்பவர் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு இவரது கடைக்கு பொருட்கள் வாங்குவதைப் போல வந்த 6 பேர் கும்பல், திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி ஹஜ்மத் சிங்கை மிரட்டி ரூ.16 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு காரில் தப்பினர்.
தகவலின் பேரில், திருப்பூர் தெற்கு போலீஸார் வந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக உள்ள கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இதற்கு காரணமாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த 4 பேரை கைது செய்தனர். இவர்கள் 6 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளையில் ஈடுப்பட்ட சக்திவேலின் மனைவி, கோவையில் காவலராக பணியாற்றி வருவதும், அவரும் அவரது நண்பர் இந்த கொள்ளைக்கு மூலகாரணமாக சக்திவேல் செயல்பட்டதும் தெரியவந்தது.
பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை நிறுத்திவிட்டு கும்பல் தப்பியது. காரில் பதிவாகி இருந்த கை ரேகைகளை போலீஸார் பதிவு செய்ததோடு, கார் பதிவெண்ணை கொண்டு அதன் உரிமையாளர் சக்திவேலை பிடித்து விசாரித்தனர். இதில், சக்திவேலின் மனைவி கோவையில் காவலராக பணியாற்றி வருவதும், இந்த கொள்ளைக்கு மூலகாரணமாக சக்திவேல் செயல்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில், 4 பேரை தேடி வந்த நிலையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.