திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 1ம்தேதி வரையிலான இலவச தரிசன டோக்கன்கள் காலியானதால் கவுன்டர்கள் மூடப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் நேற்று முன்தினம் நள்ளிரவு திறக்கப்பட்டது. வரும் 1ம்தேதி நள்ளிரவு 12 மணி வரை இந்த சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதற்காக ஏற்கனவே ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் வரும் 1ம்தேதி வரை சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, 4.25 லட்சம் டோக்கன்கள் வழங்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து திருப்பதியில் 9 இடங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைத்து கடந்த 21ம் தேதி நள்ளிரவு முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் 1ம்தேதி வரையிலான அனைத்து டோக்கன்களும் இன்று அதிகாலை 4.30 மணி வரை பக்தர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. இதனால் கவுன்டர்கள் அனைத்தும் மூடப்பட்டது. இனி இலவச டோக்கன்கள் வழங்கப்படாது எனவும், டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு வர வேண்டும். டோக்கன்கள் இன்றி திருப்பதிக்கு வந்தால் சுவாமி தரிசனம் செய்ய முடியாது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
₹5.05 கோடி காணிக்கை
வைகுண்ட துவாதசியான நேற்று காலை முதல் இரவு வரை 63,519 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அதேபோல் நேற்று ஒரே நாளில் உண்டியலில் ₹5.05 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.