Saturday, May 18, 2024
Home » திருப்பத்தூர் மாவட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த அக்கா மகளை கழுத்தறுத்து கொடூர கொலை: தாய்மாமன் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த அக்கா மகளை கழுத்தறுத்து கொடூர கொலை: தாய்மாமன் கைது

by Arun Kumar

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கல்லூரி மாணவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தப்பியோடிய உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவி ஜீவிதாவை கொன்றுவிட்டு தப்பியோடிய உறவினர் சரண்ராஜை (35) போலீஸ் கைது செய்தது. நிலக்கல் நத்தம் பகுதியில் பதுங்கி இருந்த சரண்ராஜை எஸ்.பி. ஆல்பர்ட் தலைமையிலான தனிப்படை போலீஸ் கைது செய்தது.

தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த அக்கா மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் மாமனை, போலீஸார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இளம்பெண்ணை அவரின் தாய் மாமன் சரண்ராஜ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். சரண்ராஜிக்கு 35 வயது ஆகிறது. இவர் புகைப்பட கலைஞராகவும், ஓட்டுநராகவும் வேலை செய்து வந்திருக்கிறார்.

தன்னைவிட 17 வயது குறைவான, அக்காள் மகளை திருமணம் செய்துகொள்ள விரும்பிய சரண்ராஜ், தனது அக்காவிடம் சென்று திருமணம் குறித்து அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், உடன்பிறந்த தம்பியாக இருந்தாலும், சரண்ராஜ் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்படுவதால், ‘மகளை திருமணம் செய்துகொடுக்க முடியாது’ என்று திட்டவட்டமாக அவரின் அக்கா தெரிவித்திருக்கிறார்

இந்த நிலையில், நேற்று கல்லூரி விடுமுறை என்பதால், இளம்பெண் வீட்டில் இருந்தார். வழக்கம்போல், அவரது பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். இதையறிந்த தாய்மாமன் சரண்ராஜ், நேற்று மாலை இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் மீண்டும் தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டியிருக்கிறார். இளம்பெண், காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த சரண்ராஜ், ‘என்னை கல்யாணம் பண்ணிக்கவில்லையென்றால், செத்துப்போ..’ என்றுசொல்லி, அவரைத் தாக்கி, மறைத்து கொண்டுவந்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்றார்.

இதையடுத்து, தானும் தற்கொலை செய்துகொள்ள போவதாக கடிதம் எழுதி, இளம்பெண்ணின் சடலத்தின் அருகே வைத்த சரண்ராஜ், தனது செல்போனையும் அங்கேயே வீசிவிட்டு, தப்பி ஓடினார். அக்கம், பக்கம் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின்பேரில், நாட்றம்பள்ளி போலீஸார் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, கொலை வழக்கு பதிவுசெய்த போலீஸார், தப்பி ஓடிய தாய்மாமன் சரண்ராஜை தீவிரமாக தேடினர். அப்போது, அவர் ஒரு டீக்கடையில், எந்தவித பதற்றமுமில்லாமல் அமர்ந்திருப்பதைக் கண்ட போலீஸார், அவரை கைதுசெய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம், நாட்றம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi