தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனுடன், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓஎம்ஆர் சாலையில் உள்ள பகுதியில், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் திறந்த வாகனத்தில் சென்று நேற்று வாக்கு சேகரித்தார். அதை தொடர்ந்து 195 மற்றும் 196 வது வட்டத்திற்கு உட்பட்ட கண்ணகிநகர், ஒக்கியம் பேட்டை, நேருநகர், துரைப்பாக்கம், வெட்டுவாங்கேணி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை மற்றும் ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இதில் மேயர் பிரியா, சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழிசை சொல்கிறார் கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லை என்று. மருத்துவமனை பக்கம் வந்து கேட்டிருந்தால் தெரிந்து இருக்கும். ஒரு இயக்குநர், 52 பாராமெடிகல் ஊழியர்கள், 360 நர்ஸ், 105 மருத்துவர்கள் உள்ளனர்.
இந்த மருத்துவமனை திறந்து 6 மாதங்கள் முடியவில்லை. இந்திய வரலாற்றிலேயே எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத அளவிற்கு நேற்று மதியம் வரை 1.5 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறாக மக்களுக்கு பயணளிக்கும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்று கேலி செய்வது நீங்கள் வகித்த பொறுப்பிற்கு அழகல்ல. இப்பகுதி மக்கள் மருத்துவ சேவைக்கு என்ன செய்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை.
இப்போதாவது தொகுதிக்கு வாக்கு கேட்டு வந்துள்ள உங்களை எங்கள் தலைமையில் அழைத்து செல்கிறோம். 12 வட்டங்கள் எங்கே எல்லாம் உள்ளது, எங்கே எல்லாம் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்பதை எல்லாம் அழைத்து சென்று காட்டுகிறோம். அதேபோல் மற்றொரு வேட்பாளர், அண்டபுளுகு ஆகாச புளுகு கேள்விபட்டதுண்டு இது ஜெயவர்தன் புளுகு. அவர் சொல்கிறார் ஓஎம்ஆர் சாலையில் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணமாம்.
இதை கேட்டால் எடப்பாடியே சிரிப்பார், டைடல் பார்க் கட்டிடம் கட்டும் போது எடப்பாடி எங்கிருந்தார், நீங்கள் எங்கிருந்தீர்கள் என்பது தெரியாது. டைடல் பார்க் 1999ல் கட்டப்பட்டு, 2000த்தில் கலைஞர் தலைமையில் வாஜ்பாய் திறந்து வைத்தார். வேட்பாளர்கள் விமர்சனங்கள் செய்வதை ஏற்கிறோம். ஆனால் குறைகளை, குற்றங்களை கண்மூடித்தனமாக சொல்வதை ஏற்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.