சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சந்தித்து பேசினர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடியை பாமக எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், வெங்கடேசன், சிவகுமார் சந்தித்து பேசினர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை அமைத்தன. இருப்பினும் இக்கூட்டணியில் கடந்த சில நாட்களாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக, கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மற்றொரு புறம் அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வருகிறது. பாஜக, பாமக, தேமுதிக, தமாக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்.எல்.ஏக்கள் 3 பேர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், வெங்கடேசன், சிவகுமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர். நேற்றும் பாமக எம்.எல்.ஏக்கள் சிலர் ஈபிஎஸ்-ஐ சந்தித்து பேசியுள்ளனர். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பாமக வர வேண்டும் என ஈபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.