தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திற்கு வரத்து குறைந்ததால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது. இதனால் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. சொற்ப அளவிலான நாட்டு படகுகள் மட்டுமே கடலுக்கு சென்று கரை திரும்பியதால் மீன்களில் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
சீலா மீன் கிலோ 1500 முதல் 1600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. விளைமீன் 500 ரூபாய், ஊளி மீன் 400 ரூபாய், சால மீன் கிலோ 150 ரூபாய் வரை விற்பனையானது. நெத்திலி 200 ரூபாய், பாறை 400 ரூபாய், நண்டு 500 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக ஆடி மாதத்தில் மீன்களின் விலை குறைவாக காணப்படும் நிலையில், கடலில் வீசும் பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைந்து விலை அதிகரித்திருப்பதால் மீன் பிரியர்கள் விரும்பிய மீனை வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். விலை அதிகரிப்பால் மீனவர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.