Sunday, May 19, 2024
Home » மூடப்பட்ட ஆலையை திறக்க முயற்சிப்பதா?: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வேதாந்தா நடவடிக்கைக்கு ஆலை எதிர்ப்புக்குழு கண்டனம்..!!

மூடப்பட்ட ஆலையை திறக்க முயற்சிப்பதா?: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வேதாந்தா நடவடிக்கைக்கு ஆலை எதிர்ப்புக்குழு கண்டனம்..!!

by Kalaivani Saravanan

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வேதாந்தா நடவடிக்கைக்கு ஆலை எதிர்ப்புக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மீண்டும் முயற்சி:

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மீண்டும் வேதாந்தா தொழில் குழுமம் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களிடம் இருந்து வேதாந்தா விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் 5 ஆண்டுகளுக்கு முன் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடி சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் காற்று, நீர் மற்றும் நிலம் மாசடைவதாகவும், மக்களுக்கு நோய் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. மக்களின் நீண்ட போராட்டத்தின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடி சீல் வைத்துள்ளது.

அபாயகரமான கழிவுகளை அகற்ற மட்டுமே அனுமதி:

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அபாயகரமான கழிவுப் பொருள்களை மட்டும் அகற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அபாயகரமான கழிவுப் பொருள்களை அப்புறப்படுத்துவதை கண்காணிக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கழிவுப் பொருள்களை அகற்ற உள்ள நிலையில் ஆலையை மீண்டும் இயக்க விருப்ப விண்ணப்பங்களை வேதாந்தா வரவேற்றிருப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆலையை மீண்டும் இயக்க முன்வரும் நிறுவனம், ஒரே நேரத்தில் 4,000 தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும் என வேதாந்தா விளம்பரம் செய்துள்ளது.

ஆலையின் பாதுகாப்பு தொழிற்சாலை கட்டடங்கள் மற்றும் கட்டமைப்பின் உறுதித்தன்மையை மதிப்பிடும் திறன் கொண்டதாக நிறுவனம் இருக்க வேண்டும். ஆலையில் என்னென்ன சீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்ற மதிப்பீட்டு அறிக்கையையும் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் தர வேண்டும். ஆலையை இயக்க திறமையான நடவடிக்கைகள் பற்றியும் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் அறிக்கை தர வேண்டும் எனவும் விளம்பரத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அரசு உறுதி அளித்துள்ள நிலையில் வேதாந்தா வெளியிட்டுள்ள விளம்பரத்தால் தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மூடப்பட்ட ஆலையை திறக்க முயற்சிப்பதா?: கண்டனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் வேதாந்தா நடவடிக்கைக்கு ஆலை எதிர்ப்புக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் முன்பே ஆலையை திறக்க முயற்சிப்பது அரசையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயல் என எதிர்ப்புக்குழு கண்டனம் தெரிவித்திருக்கிறது. வேதாந்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வோம் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

12 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi