Wednesday, May 8, 2024
Home » திருவள்ளுவர் மேம்பாலத்தில் இடம் பெற்ற ‘திருக்குறள்’: தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

திருவள்ளுவர் மேம்பாலத்தில் இடம் பெற்ற ‘திருக்குறள்’: தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

by Mahaprabhu

நெல்லை: நெல்லை சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலத்தில், தூண்களுக்கு இடையே இரு புறங்களிலும் திருக்குறள்கள் எழுதப்பட்டுள்ளன. நெல்லை சந்திப்பையும், டவுனையும் இணைக்கும் வகையில் ரயில் தண்டவாளங்களுக்கு மேலே வரலாற்று சிறப்புமிக்க ஈரடுக்கு மேம்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலம் அமைத்திட 1969ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அடிக்கல் நாட்டினார். ரூ.47 லட்சத்தில் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு 1973 நவ.13ம் தேதி ஈரடுக்கு மேம்பாலத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார். திருக்குறளின் ஈரடிகளை நினைவு படுத்தும் வகையில் அமைந்த இந்த பாலத்திற்கு திருவள்ளுவர் மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டபோது ஆசியாவிலேயே ரயில் பாதையின் மேலே கட்டப்பட்ட மிகப்பெரிய ஈரடுக்கு மேம்பாலமாக திகழ்ந்தது.

பாலத்தின் மேலே பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும், கீழ்ப்பகுதி பாலத்தில் சைக்கிள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையிலும் இரண்டு அடுக்காக மேம்பாலம் அமைக்கப்பட்டது. அதற்கு கீழே நெல்லை சந்திப்பிலிருந்து கன்னியாகுமரி, திருச்செந்தூர், தென்காசி, செங்கோட்டை செல்லும் ரயில்கள் தங்கு தடையின்றி ரயில் போக்குவரத்தை தொடரும் வகையில் திட்டமிட்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் கழித்து கடந்த 2000மாவது ஆண்டு கலைஞர் முதல்வராக இருந்தபோது ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் நடந்தது. இந்தப் பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளாகும் நிலையில் பாலத்தை சீரமைக்கவும், புதுப்பொலிவு பெறச் செய்யும் வகையிலும் தற்போது ரூ.2 கோடியே 8 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாலத்தின் கைப்பிடி சுவர்கள், சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழ்பாலத்தில் தூண்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி பகுதிகளில் அடிக்கடி சிலர் படுத்து தூங்குவதாக நெடுஞ்சாலைத்துறைக்கு புகார்கள் சென்றன. அதிலும் மனநோயாளிகள் ஆபத்தை உணராமல், அதில் படுத்து உறங்குவதால் விபரீதங்கள் நிகழும் அபாயங்களும் காணப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் தூண்களுக்கு இடையிலான இடைவெளி பகுதியில் தடுப்பு பலகைகளை அமைத்தனர். அதில் திருக்குறள்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. கீழ்பாலம் வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்களை திருவள்ளுவர் மேம்பாலத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ள திருக்குறள் வரிகள் வெகுவாக கவர்கின்றன.

You may also like

Leave a Comment

eighteen − seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi