திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் தண்ணீர்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன், தண்ணீர்குளம் திமுக கிளைச் செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி சிபிஎஸ்இ பள்ளி அருகில் 12 அடி சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பார்வையிட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது தண்ணீர்குளம் ஊராட்சி கணபதி நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான மகாலிங்கம் (42) என்பவர் ஆட்டோவை வீட்டிலிருந்து சாலையில் ஏறும் வகையில் சாலையை சரிவாக அமைக்கும் படி கேட்டுள்ளார். அப்போது ஊராட்சிமன்ற தலைவரின் கணவர், தயாளன் அப்படியெல்லாம் செய்ய முடியாது என கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மகாலிங்கம் மற்றும் அவரது தந்தை மாரி (73) ஆகியோர் தயளனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மகாலிங்கம் என்பவர் தயாளனின் இடது புற காதை கடித்ததில் காது தனியாக வந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதல் சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து ஊராட்சி மன்றத் தலவைர் தேவிகாவின் மகன் தியாகு செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் காதை கடித்து தனியாக எடுத்த மகாலிங்கம் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தந்தை மாரி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தண்ணீர்குளம் ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.