திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியை தூய்மை நகரமாக்க ரூ.44 லட்சம் மதிப்பிலான 22 பேட்டரி குப்பை அள்ளும் வாகனங்களை வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 450 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. திருவள்ளூர் நகராட்சி முதல் நிலை நகராட்சியில் இருந்து தற்போது தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்துப்பட்டுள்ளது. இந்நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 74,700 ஆகும். இந்நகராட்சி திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரமாகவும், புகழ்பெற்ற ஸ்ரீ வைத்திய வீரராகவர் சுவாமி திருக்கோயில் இருப்பதால் யாத்ரிகர் ஸ்தலமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நகராட்சியில் மொத்தம் 24.66 மெட்ரிக் டன் ஆக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனையடுத்து திருவள்ளூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக 15வது நிதிக்குழு மான்யம், 2022-23 திட்டத்தின் கீழ் 22 பேட்டரியால் ஆன குப்பை அள்ளும் வாகனங்கள் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டது. இதனையடுத்து நகராட்சி அலுவலக வளாகத்தில் பேட்டரியால் ஆனா குப்பை சேகரிக்கும் வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகர மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு 22 பேட்டரி வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ பேசும்போது, திருவள்ளூர் நகரத்தை தூய்மையாக வைத்திருக்க எதுவாக தூய்மைப் பணியாளர்களாக சிட்டி க்ளீன் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 162 பேர் உள்ளனர். மேலும் ஓட்டுனர்கள் 13 பேரும், மேற்பார்வையாளர்கள் 8 பேரும் இந்த தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பேட்டரி வாகனம் எளிதில் சிறிய தெருக்களுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க வசதிகள் உடையது. நகராட்சியில் உள்ள 16,985 வீடுகளுக்கும் சென்று குப்பைகளை பிரித்து வாங்குவதற்கு ஏதுவாக இருக்கும். எனவே குப்பைகளை தெருவில் கொட்டாத அளவிற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டார்.
நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா பேசும் போது, இந்த பேட்டரி வாகனங்களில் மொத்தம் 12,600 கிலோ குப்பைகள் பெறப்படும். எனவே பொதுமக்கள் மக்கும் குப்பை மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். குப்பைகளை சாலையில் கொட்டுவோர் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் அறிவுறித்தலின் பெயரில் நகராட்சி ஆணையர் எச்சரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், பொறியாளர் நடராஜன், சுகாதார ஆய்வாளர்கள் சுதாகர், வெயிலுமுத்து மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.