திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பட்டத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு மழை இல்லாமல் நெல் பயிர் கருகிக் கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழைபெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள கண்மாய், குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகிறது. அதிக மழை பெய்ததன் காரணமாக, விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல் பயிருக்கு உரமிட்டு களைகள் எடுத்து வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சென்ற ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் மிகவும் சிரமப்பட்டு இருந்தோம். இந்த ஆண்டு விவசாய செலவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கொண்டிருந்தோம். அப்போது அரசு, வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை போன்றவை ஒரே சமயத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டதால் விவசாய செலவினங்களுக்கு உதவியாக இருந்து வருகிறது என்றனர்.