Friday, May 10, 2024
Home » திருமங்கலம் – கொல்லம் இடையிலான நான்கு வழிச்சாலையில் குறுக்கிடும் உயரழுத்த மின்கோபுரங்கள்: பணிகள் தாமதிக்கும் அபாயம்

திருமங்கலம் – கொல்லம் இடையிலான நான்கு வழிச்சாலையில் குறுக்கிடும் உயரழுத்த மின்கோபுரங்கள்: பணிகள் தாமதிக்கும் அபாயம்

by MuthuKumar

திருமங்கலம்: திருமங்கலம் – கொல்லம் நான்கு வழிச்சாலைக்காக உயர் அழுத்த மின்கோபுரங்களை மாற்றியமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் அவை குறுக்கிடும் பகுதிகளில் பணிகளில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது. திருமங்கலம் நகரிலிருந்து டி.கல்லுப்பட்டி, ராஜபாளையம், தென்காசி வழியாக கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது.

இதற்காக இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்த நிழல்தரும் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி கிராமத்தினை தவிர்த்து மற்ற பகுதிகளான புதுப்பட்டி, குன்னத்தூர், டிகல்லுப்பட்டி, சுப்புலாபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் புதிய நான்குவழிச்சாலை புறவழிச்சாலையாகவே செல்கிறது. திருமங்கலம் ஆறுகண்பாலம் அருகே இருந்து துவங்கும் இந்த நான்குவழிச்சாலை பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்காக அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டு மண் பரப்பப்பட்டு வருகிறது. இதேபோல் சாலையோரத்தில் இருந்த மின்சார கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றனர். புதிய நான்கு வழிச்சாலையில் ஆலம்பட்டிக்கு அடுத்துள்ள கட்ராம்பட்டி விலக்கு பகுதியில் கூடங்குளம் பகுதியிலிருந்து வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் உயர் அழுத்த மின்கோபுரங்கள் குறுக்கே வருகின்றன.

இதேபோல் விருதுநகரிலிருந்து கோவைக்கு செல்லும் உயர்மின் கோபுரங்களும் அமைந்துள்ளன. புதியதாக அமையும் நான்கு வழிச்சாலையில் குறுக்கே இந்த உயர் அழுத்த மின்கோபுரங்கள் வருவதால் இவற்றையும்மாற்றி அமைக்க மின்வாரியத்துறையிடம் நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சாதாரண மின்கம்பங்கள், டிராஸ்பார்மர்களை எளிதில் மாற்றிவிடும் நிலையில், உயர்மின் கோபுரங்களை மாற்றி வேறு இடத்தில் அமைப்பது சற்று சிக்கலான விஷயம்தான் என்கின்றனர் மின்வாரியத்துறையினர்.

இருப்பினும் நான்கு வழிச்சாலைக்காக சில இடங்களில் இந்த உயர் அழுத்த மின்கோபுரங்களை கட்டாயம் மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதற்கு சற்று காலதாமதம் ஏற்படும் என்பதால் நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் நிறைவடைவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உயர்மின்கோபுரங்களை மாற்றவேண்டிய இடங்களை தவிர்த்து, மதுரை மாவட்டத்தின் பிறபகுதிகளில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

You may also like

Leave a Comment

17 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi