தேனி: தேனி மாவட்டம் முலக்கடை அருகே சோலைத்தேவன்பட்டியில் எஸ்.ஐ. வேலை வாங்கித் தருவதாக ரூ.13 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கணேசன் – ஜெயா தம்பதியின் மகன் முத்தமிழ்ச்செல்வனுக்கு எஸ்.ஐ. வேலை வாங்கித் தருவதாக மோசடி அரங்கேறியுள்ளது. ரூ.22 லட்சம் தந்தால் எஸ்.ஐ. வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆவடியைச் சேர்ந்த ராஜேந்திரன் மோசடி செய்திருக்கிறார். ராஜேந்திரன் கூறியதை நம்பி அடுத்தடுத்து ரூ.13 லட்சத்தை கணேசன் ஜெயா தம்பதியர் கொடுத்துள்ளனர். எஸ்.ஐ. வேலை வாங்கித் தருவதாக கூறிவிட்டு காலம் தாழ்த்தி வந்த நிலையில் சந்தேகமடைந்த தம்பதியர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
தம்பதியரின் புகாரை அடுத்து முன்னாள் சி.ஆர்.பி.எஃப். வீரர் ராஜேந்திரன், பூசாரி முருகன் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டாவது குற்றவாளி ராஜராம் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வேலை வாங்கி தருவதாக கூறும் கும்பலிடம் மக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் பலமுறை அறிவுறுத்தியும், பொதுமக்கள் பலர் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்து வருவது குறிப்பிடத்தக்கது.