*கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
தேனி : தேனி நகராட்சி பகுதிகளில் கட்டுபாடின்றி சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தேனி நகராட்சி பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நகரின் முக்கிய சாலைகளான பெரியகுளம் சாலை, மதுரை சாலைகளில் ஆங்காங்கே ஆட்டுக்கறிக்கடைகள், கோழிக்கறிக்கடைகள், மீன்கடைகள் உள்ளன. இதில் இறைச்சிக்கழிவுகளை கடைக்காரர்கள் தெருக்களில் வீசிவிடுவதை வழக்கமாக்கி உள்ளனர்.
தெருக்களில் வீசப்படும் கழிவு இறைச்சிகளை உண்பதற்காக ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் கூடி விடுகின்றன. இதில் இறைச்சிகளை உண்பதில் நாய்களுக்குள் சண்டையிட்டபடி திடீரென சாலைகளுக்கு ஓடிவரும் நாய்களால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்ததோடு பலர் ஊனமாகியும் உள்ளனர்.
அனைத்து ஊர்களிலும் தெரு நாய்கள் தொந்தரவு அளவிற்கு அதிகமாகவே உள்ளது. இந்த தெரு நாய்களில் ரேபிஸ் பாதிப்பு இருப்பவை குறித்து நாம் அறிந்துகொள்ள முடியாது என்பதால் அவற்றை பார்த்தாலேே அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக ரேபிஸ் உள்ள நாய்கள் கடித்து உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாவிடில் ரேபிஸ் வைரஸ் உடலில் மிக வேகமாக பரவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், பசியின்மை, வாந்தி, தண்ணீர் விழுங்க சிரமம் போன்றவை ஏற்படும். இரண்டாம் நிலையில் நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், பக்கவாதம், உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும். பின் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும் அதனால் பலன் இல்லை.
நம் நாட்டில் 2005ம் ஆண்டு வரை தெரு நாய்களை கொல்வதன் வாயிலாக அவற்றன் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. பின் கருத்தடை திட்டம் கொண்டு வரப்பட்டது. விலங்குகள் நல வாரியத்தின் பரிந்துரையால் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தால், 2005ம் ஆண்டுக்கு பின் நாய்களை அழிக்கும் பணியை உள்ளாட்சி நிர்வாகம் நிறுத்தியது. அதேசமயம், மாற்றுத்திட்டமான கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தவில்லை. இதனால், தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகுவதோடு, நாய் கடியால் மரணம் அடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதன்படி பாதிப்புகளை அதிகம் ஏற்படுத்தும் தெருநாய்கள் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாக உள்ளன. அவை குறுக்கே செல்வதால் பல இடங்களில் வாகனங்கள் விபத்துகளில் சிக்கி உள்ளன. தெருநாய்களை கட்டுப்படுத்த கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் தேனியில் 5 வயது சிறுவனை நாய்கள் கூட்டமாக சேர்ந்து கடித்து குதறிய சம்பவம் பெரும் சோகத்தையும், பீதியையும் தேனி மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. எனவே, பொதுமக்களை மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் தெரு நாய்களை கட்டுபடுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தெருநாய்களை காப்பகங்களில் பாதுகாக்கலாம்மாவட்ட அளவில் குழு அமைத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கென ‘விலங்குகள் வசிப்பகம்’ ஏற்படுத்தி, அதை தன்னார்வ அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். தெருநாய்களை பிடித்துச்சென்று காப்பகங்களில் பாதுகாக்கலாம். இதற்கிடையே வளர்ப்பு நாய்களுக்கு பிறந்த 4 மாதத்திலும் பின் ஆண்டுக்கு ஒரு முறையும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இந்த தடுப்பூசிகள் அரசு கால்நடை மருத்துவமனைகளில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நாய்கள் கடித்த கால்நடைகளுக்கு ஐந்து ஊசிகள் செலுத்தப்படும். அதேபோல பொதுமக்களை நாய் கடித்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் நாள், 3ம் நாள், 7ம் நாள், 14வது நாள் மற்றும் 21ம் நாள் என ஐந்து தடுப்பூசிகள் போடப்படுகிறது.
ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒருவர்
இந்தியாவில் கிட்டத்தட்ட 3 கோடி தெரு நாய்கள் உள்ளன. இவை ஆண்டுக்கு 35 லட்சம் பேரை கடிக்கின்றன. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒருவர், நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார் என தேசிய அளவிலான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்திய மருத்துவ துறை ரேபிஸ் மரணங்களை முழுமையாக பதிவு செய்வதில்லை என கூறப்படுகிறது. நாய் கருத்தடை திட்டம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முழுவீச்சில் செயல்பட வேண்டும். ஆனால், 2005லிருந்து நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்ட போதிலும், அதற்கான நிதியை ஒன்றிய அரசு முழுமையாக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் அலட்சியம் காட்டுவதால் தெரு நாய்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறது.