சென்னை: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி உயர்மட்ட பாலம் அமையவுள்ளது தொடர்பான முப்பரிமாண காட்சியை தமிழக அரசு வெளியிட்டள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழித்தட உயர்மட்ட பாலத்துக்கு 621 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மிக முக்கியமான சாலையில் அண்ணாசாலை தான் முதல் நிலை. அண்ணாசாலையில் திருவல்லிக்கேணி சந்திப்பு முதல் கிண்டி வரையிலான பகுதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சாலைகள் இணைகின்றன.
இதனால், அந்த சாலை சந்திப்புகளில் எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்து காணப்படும். அத்துடன், சாலையைக் கடந்து மறுபகுதிக்கு செல்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். தொடர்ந்து நாள்தோறும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில், புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்த ரூ.621 கோடி நிதி ஒதுக்கி நேற்று அரசாணை வெளியிட்டது. மேலும் உயர்மட்ட பாலம் மூலம் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும் என விளக்கம் அளித்தது. இந்நிலையில் 4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.