தாராபுரம்: தாராபுரம் அருகே பள்ளி கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு படித்து வரும் 2 மாணவிகளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இப்பிரச்னை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கவனத்திற்கு சென்றது. அவரது உத்தரவின்படி தாராபுரம் கோட்டாட்சியர் செந்திலரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தலைமை ஆசிரியை உள்பட இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.