சித்ரதுர்கா: சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகா வட்டிகெரே கிராமம் அருகே நேற்று காலை சோதனை ஓட்டத்தின் போது, ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கிய இந்த ஆளில்லா விமானம் நாயக்கனஹட்டி அருகே உள்ள குடாப்பூர் விமான தளத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், விவசாய நிலத்தில் திடீரென பெரும் சத்தத்துடன் விழுந்தது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏராளமான மக்கள், விபத்து நடந்த பகுதிக்கு திரண்டு, நொறுங்கி கிடந்த விமானத்தை பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து டிஆர்டிஓ தற்போது பாதுகாப்பு அமைச்சகத்திடம் விளக்கம் அளித்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விபத்துக்கான சரியான காரணங்களை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.