சென்னை: தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வை சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கை தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான சிஏபி சட்டம் ஆனதற்கு முழு முதற்காரணமே நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது திமுக. 2021ல் ஆட்சிக்கு வந்த உடனே சிஏஏ-வை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்.
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்கு துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம். No CAA In TamilNadu. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்கு துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்