சென்னை: மனைவியை தகாத வார்த்தைகளால் பேசிய நண்பரை கொலை செய்த வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள மின்சாரவாரிய அலுவலகம் முன்பாக, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி யூசுப் அலி மற்றும் அவரது நண்பர் நாசர் அலி பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அவர்களின் நண்பர் அலிஷேர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை தகாத முறையில் பேசியது ஏன் எனக் கேட்டு நாசர் அலியுடன் தகராறுசெய்துள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாசர் அலியை அலிஷேர் சரமாரியாக குத்தினார். இதில் நாசர் அலி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அண்னா சாலை போலீசார் அலிஷேரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த்தனர். இந்த வழக்கு அல்லிகுளம் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வத்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தோத்திரா மேரி, குற்றம் சாட்டப்பட்ட அலிஷேருக்கு ஆயுள் தண்டனையும், 5ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.