Thursday, May 9, 2024
Home » திருமண வரம் தரும் குரு பார்வை

திருமண வரம் தரும் குரு பார்வை

by Lavanya

மனித வாழ்க்கை முழுமை பெறுவது திருமணத்தில்தான். விரதங்கள், இறைவழிபாடுகளைக் கூட தம்பதியராகச் சேர்ந்து செய்யும்போது கூடுதல் பலன் கிடைக்கும் என்கின்றன வேதங்கள். பிறப்பு, கல்வி, வேலை இதெல்லாம் வாழ்க்கையில் முதல் இன்னிங்ஸ் என்று வைத்துக் கொண்டால், திருமணம் என்பது
இரண்டாவது இன்னிங்ஸ்!

‘‘பொண்ணுக்கு வரன் தேடிக் கிட்டிருக்கேன். சரியா தகையல…’’ என்று ஜோதிடர்களிடம் போனால், ‘‘குரு பலன் இன்னும் வரலையே. இப்போ ஏன் ஜாதகத்தை தூக்கிக்கிட்டு அலையறீங்க. அடுத்த வருஷம் வாங்க’’ என்று உங்களை விரட்டுகிறார்களா? அதென்ன குரு பலன். அப்போது திருமணமே குருவின் பலத்தினால்தான் தீர்மானிக்கப்படுகிறதா? மற்ற எட்டு கிரகங்களும் ஒப்புக்கு சப்பாணியா என்கிற கேள்விகளும் எழலாம்.

அப்படியெல்லாம் இல்லை. அந்தந்த கிரகத்திற்குரிய வேலையை அவை அவை செய்கின்றன. ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம், வியாழன் என்றழைக்கப்படும் குரு. கற்றல், கற்றுக் கொடுத்தல் இவை இரண்டையும் சரிவரச் செய்பவர் இவர்தான். எங்கெல்லாம் அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்கிறார்களோ, அங்கெல்லாம் இவர் இருப்பார். அவர்களை ஆசீர்வதிக்கச் செய்பவரும் இவர்தான். அப்படிப்பட்ட மகோன்னதமான குருவின் ஆசீர்வாதத்தைத்தான் குரு பலன் என்கிறோம். ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்றும் அழைக்கிறோம்.

குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். விதைக்கு வீர்யத்தை அளிப்பவர் அவரே. தொண்ணூறு என்றால் அதை நூறாக்கி முழுத் திருப்தியைத் தருவார். காயைக் கனிய வைப்பார். கண்ணுக்குள் பார்வையாக இருப்பவர். சொல்லுக்குள் பொருளாய் பொதிந்தவர். உடலுக்குள் உயிராக உறைபவர். உயிரை உருப்பெறச் செய்பவர் என்று எல்லாமே குருவின் அருளாலும், திருப்பார்வையாலும்தான் நிகழ்கின்றன. ‘பெண்ணின் திருமண வயது பதினெட்டு’ என்று ஆட்டோவில் எழுதியிருக்கலாம். எத்தனை பேருக்கு அந்த வயதில் திருமணமாகிறது? ‘‘27 வயசாகியும் இன்னும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்றாங்க’’ என்று புலம்பல் வந்தால், குருவின் பார்வையும், குரு பலனும் வலுவடையவில்லை என்று அர்த்தம்.

தோஷங்களை நீக்கி, நல்ல இடத்தில் திருமணம்முடியவேண்டுமெனில் இவருடைய அனுமதியும் ஆசியும் தேவை. ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பது மகாவாக்கியம். ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சமாகவும் வக்கிரமாகவும் இருந்தாலும், எவ்வளவு பலவீனமானாலும் சரி… குரு பார்த்துவிட்டால் போதும்; பலம் கிடைத்து விடும். குழந்தைக்கு முதல் முடி எடுத்து மொட்டை போடுவதற்கு குலதெய்வக் கோயிலுக்குச் செல்கிறோம். இன்னொரு கோணத்தில் பார்த்தால், குலதெய்வம்தான் உங்களுக்கு குருவும் கூட. குலதெய்வமே தெரியவில்லை என்பவர்கள், குருவின் முழு அம்சமான திருச்செந்தூர் முருகனையே குலதெய்வமாகக் கொள்ளுங்கள்.

எல்லா ராசிகளுக்குமே குரு பலன் தேவையா? ஆமாம்! ஆனால், எல்லா ராசிக்காரர்களுக்கும் குரு நன்மையையே தந்து கொண்டிருப்பார் என்று சொல்ல முடியாது. சில ராசிகளுக்கு தன் எதிர்மறை கதிர்வீச்சைத் தருவார். நீங்கள் ரிஷப ராசிக்காரர் எனில் குரு எட்டாமிடம் எனும் அஷ்டமாதிபதி ஆகிறார். எட்டாம் இடத்திற்குரியவரான குரு அலைச்சலைத்தான் தருவார் என்பது ஜோதிட சட்டம். அதேபோல மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு பாதகாதிபதி என்கிற கெடுபலன்களைக் கொடுப்பவர் ஆகிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு கடன், எதிரிகளை உருவாக்கக் கூடியவராக குரு இருக்கிறார். இப்படி அல்லல் தருகிற குரு எப்படி திருமணத்திற்கு உதவுவார் என்கிற சந்தேகம் வரும். ஆனால், அந்த சட்டம் திருமணம் என்று வரும்போது செல்லுபடியாகாது. உங்களின் தற்போதைய நிலையின்படி உங்கள் ராசிக்கு 2, 5, 7, 9, 11ம் வீடுகளில் குரு அமரும்போது நல்லதுதான் செய்வார். குரு பலனை அளித்து கெட்டி மேளத்தை கொட்டச் செய்வார்.

குரு சராசரியாக ஒரு வீட்டில் & அதாவது ஒரு ராசியில், ஒரு வருடம் இருந்து ராசிக்கு யோக பலன்களைத் தருவார் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த வருடம் வேறு ராசிக்கு மாறும்போது மத்திமமான பலன்களையே அளிப்பார். அப்போது குரு பலன் இல்லையென்று ஆகிறது. உங்கள் ராசிக்கு யோகத்தை தரக்கூடிய தசா, புக்தி, அந்தரம் நடந்தால் தாராளமாக வரன் தேடி திருமணம் முடிக்கலாம்.

அது என்ன தசா, புக்தி, அந்தரம்? வேறொன்றுமில்லை. தசா என்றால் உடலின் தசையையும், புக்தி என்றால் மனம் மற்றும் புத்தியையும், அந்தரம் என்றால் அந்தக் கணத்தில் உங்கள் நிலை என்ன என்பதையும் வெளிப் படுத்தும் அம்சங்களாகும். இப்போது உங்களுக்கு குரு தசை நடந்தால் உங்கள் உடலை குருவும், சந்திர புக்தி எனில் மனதை சந்திரனும், சுக்கிரன் அந்தரம் எனில் அப்போதைக்கு சுக்கிரனும் கைகோர்த்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறான் என்று அர்த்தம்.

மீண்டும் மேஷ ராசியையே உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறேன். இப்போது மேஷ ராசியில்தான் குரு ஜென்ம குருவாக இருக்கிறார். ‘ஜென்மத்தில் ராமர் சீதையை வனத்தில் விட்டுவிட்டதைப்போல…’ என்றொரு பழமொழியே உண்டு. அதனால் குரு பலன் இல்லை என்பார்கள். ஆனால், குரு, சந்திரன், சூரியன் இவர்கள் உங்களுக்கு யோகத்தை கொடுக்கக் கூடியவர்கள். இப்போது குரு, சந்திரன், சூரியனின் தசா எனும் தசையோ, புக்தியோ, அந்தரமோ நடைபெற்றுக் கொண்டிருந்தால் தாராளமாக திருமணத்திற்கு ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒருவிதத்தில் குருவருள் துணை நிற்கும்.

‘‘என் பையனுக்கு குரு பலனும் இல்லை. நீங்க சொல்ற தசா, புக்தி, அந்தரமும் சரியில்லை. அவன்கூட படிச்ச பையனுக்கெல்லாம் கல்யாணம் ஆயிடுச்சி. சிலருக்கு குழந்தையே பொறந்து செட்டில் ஆகிட்டாங்க. எப்போ பார்த்தாலும் நீங்க நேரம், காலம் வரலேன்னு சொல்றீங்க’’ என்று புலம்பலோடு வருவார்கள். ‘‘உங்க ஜாதகம் இருந்தா கொடுங்க’’ என்று கேட்பேன். ஆம், பெற்றோரின் ஜாதகங்களை ஆராய்ந்து, அவர்களுக்கு அட்சதை போடக்கூடிய பாக்கியம் உள்ளதா என்று பார்ப்பேன். பெற்றோருக்கு குரு நல்ல இடத்தில் அமர்ந்தால்கூட திருமணத்தை நடத்தி முடிக்கலாம்.

இன்னும் சில விஷயங்களை நினைவில் நிறுத்துங்கள். வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் குரு கொலுவிருக்கும் இடங்களாகும். உங்கள் இஷ்ட, குலதெய்வக் கோயிலில் திருமணம் செய்துகொள்வதாக பிரார்த்தியுங்கள். ஏழைப் பெண்ணுக்கு திருமாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள். பசுவுக்கு பச்சரிசியும் வெல்லமும் கலந்த உணவைக் கொடுங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். தேர்வில் தவறியோரை படிக்க வையுங்கள். கல்விக் கட்டணம் செலுத்த முடியாது தவிப்போருக்கு உதவுங்கள். உங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர் ஏதேனும் சங்கடத்திலும், பிரச்னையிலும் சிக்கியிருந்தால் ஓடிச் சென்று உதவுங்கள். சிதில மடைந்த கோயிலை நிமிர்த்த முடியுமா என்று யோசியுங்கள். குருதான் ஒளிக்குரிய கிரகமும் கூட. எனவே பள்ளிக்கு லைட் வாங்கிக் கொடுங்கள்.

மேலே சொன்ன அனைத்து இடங்களும், செயல்களும் குருவின் ஆளுகைக்கு உட்பட்ட விஷயங்கள். இவ்வுலகமே கர்மா எனும் செயல், அதன் விளைவு எனும் இரு விஷயங்களுக்கு உட்பட்டது. குரு பலன் என்பது ஒரு செயல். திருமணம் என்பது அதன் விளைவு. சிதிலமடைந்த கோயிலை சரி செய்தல் என்பது விளைவு. ஏனெனில் குருவருள் காரணமாக இருந்தால்தான் கோயில் பணிகளைச் செய்ய முடியும். நீங்கள் நேரடியாக விளைவை நிகழச் செய்யும்போது குருவருள் எனும் காரணம் தானாக அங்கு நேர்கிறது. குரு பலனை தற்காலிகமாக நீங்கள் பெறுகிறீர்கள்.

அதனால் திருமணமும் நடக்கிறது. பரிகாரம் என்பதன் சூட்சுமமே இந்த விளைவுகளை உருவாக்குவதுதான்! அந்தந்த கிரகங்களுக்குரிய விஷயங்களில் நீங்கள் கவனத்தைத் திருப்பும்போது, அவர்கள் பார்வையில் நீங்கள் படுகிறீர்கள். பரிகாரம் என்பதே செயல் வடிவ பிரார்த்தனைதான் என்பதை மறக்காதீர்கள்.

‘‘ஐயா… நான் விவசாயி. எனக்குத் தெரிந்ததெல்லாம் நிலமும், நீரும்தான். நான் என்ன செய்வது?’’
‘‘கவலைப்படாதீர்கள்! நிலத்தில் விளையும் வேர்க்கடலையை தட்சிணாமூர்த்திக்கு நிவேதனம் செய்து பிரசாதமாக கொடுங்கள். பசும்பாலை அபிஷேகத்திற்குக் கொடுங்கள். வேர்க்கடலை, பசும்பால் இரண்டும் குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. இந்த தானியங்களுக்கும், காய்கறிகளுக்கும், கிரகங்களுக்கும் இருக்கும் தொடர்பையும் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம்.

நவக்கிரக குருவான பிரகஸ்பதியின் அருளைப் பெற, அவருக்கும் குருவான தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். குரு பகவானான தென்முகக் கடவுளை எல்லா சிவாலயத்திலும் தரிசிக்கலாம். சிவாகம சாத்திரப்படி சிவாலயம் எனில் கூடவே கோஷ்ட தெய்வமான தட்சிணாமூர்த்திக்கும் தனி சந்நதி உண்டு. திருமணத் தடை உள்ளவர்கள், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபாடு மேற்கொள்ளுங்கள். கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்யுங்கள். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுங்கள். கெட்டி மேளம் கொட்டும் நேரம் நெருங்கி வருவதைப் பாருங்கள்.

பூர்வஜென்மத் தொடர்பில்தான் வாழ்க்கைத்துணை வரும். ஏனெனில், திருமணமான நாளிலிருந்து ஓஹோ என்று வருபவர்களும் உண்டு. எங்கேயாவது ஓடிப்போய் விடலாமா என்று நொந்து கொள்பவர்களும் உண்டு. காரணம் கேட்டால், ‘‘எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு ஜோசியர் சொன்னாரு. நாங்கதான் கேட்காம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்’’ என்று பல பேர்
சொல்லிக் கேட்டிருப்பீர்கள்.

செவ்வாய் தோஷம் அத்தனை கடுமையானதா என்ன? அதையும் தாண்டி ஏன் செவ்வாய் தோஷமுள்ளவர்களாக அவர்கள் பிறக்கிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.

You may also like

Leave a Comment

twelve − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi