தஞ்சாவூர்: உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் 1038வது சதயவிழா மங்கள இசை, தமிழ் முறைப்படி திருமுறை அரங்கத்துடன் நேற்றுமுன்தினம் தொடங்கியது. 2ம் நாளான நேற்று அரசு சார்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப், பெரிய கோயிலுக்கு முன்பு உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் எஸ்பி ஆஷிஷ் ராவத், மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி, தருமபுர ஆதீனம், சதயவிழா குழு தலைவர் செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸிலே ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து திருமுறை ஓதுவார்கள் திருமுறை பண் இசையுடன் மேலவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, கீழராஜ வீதிகள் வழியாக வந்தனர். அப்போது யானை மீது திருமுறை பெட்டி வைத்து எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலம் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. பின்னர் காலை 9 மணியளவில் பெரிய கோயிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு தருமபுரம் ஆதினம் தலைமையில் இளநீர், சந்தனம், பால் உள்ளிட்ட 48 வகை திரவியங்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டன. பிற்பகல் 1.30 மணியளவில் பெரிய பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.