கோவில்பட்டி: கோவில்பட்டியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 100 ஆண்டுகள் தாண்டிய பள்ளிகளை அதன் பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு முதல்வர் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இந்தியாவை பாரத் என்று பெயர் வைக்கப்படுவது குறித்து எதுவும் எனக்கு தகவல் வரவில்லை. கல்வி கொள்கையில் நாமே முடிவு செய்து கொள்வதற்கு முதல்வர் கமிட்டி அமைத்துள்ளார். காலை உணவு திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்துவது குறித்து நீதிமன்றமும் கேட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார். காலை உணவு திட்டத்தில் கோவில்பட்டி கடலை மிட்டாயை சேர்ப்பது குறித்து சமூக நலத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டெட் உள்ளிட்ட தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிதி ஆதாரத்தைக் கொண்டு காலியிடம் நிரப்பப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.