செங்கல்பட்டு: பரனூர் சுங்கசாவடி அருகே உள்ள வனப்பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி அருகே வனப்பகுதி உள்ளது. இங்கு யூக்லிபட்ஸ், கருவேலம் போன்ற மரங்கள் ஏராளமாக உள்ளன. அதுமட்டுமில்லாமல், மயில், நரி, பாம்பு போன்ற விலங்குகள் ஏராளமாக உள்ளன. நேற்று திடீரென இந்த வனப்பகுதி தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, அங்கிருந்த மரங்கள் செடி, மற்றும் கொடிகள் கொழுந்துவிட்டு எரிந்தன. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இதை பார்த்த வாகன ஓட்டிகள் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார், செங்கல்பட்டு வனத்துறை மற்றும் தீயனைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த ட தீயணைப்புதுறை வீரர்கள் 10 பேர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதுதொடர்பாக, தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.