சென்னை: தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி, கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவது பற்றி இந்த குழு விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. திருச்சி கனிமவளத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலன் தலைமையில் 3 பேர் அடங்கிய இந்த குழு, தமிழ்நாடு – கேரளா எல்லையான புளியறையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கேரளாவிற்கு செல்லும் கனரக வாகனங்கள், அனைத்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.