தென்காசி: தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை மத்தியில் ஆளும் அரசு தொடர்ந்து பழிவாங்குகிறது. கடும் நெருக்கடிகளுக்கு இடையே தமிழக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. சொன்னதை செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாஜக ஆளும் 8 மாநிலங்களிலும் எய்ம்ஸ் உள்ளது; தமிழகத்தில் இன்னும் கட்டவே இல்லை. வெள்ளம் வந்த போது பிரதமர் மோடி தமிழகம் வந்தாரா? நிதி கேட்டோம் கொடுத்தாரா? என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்கக் கூடியவர் பிரதமராக வர வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை ரூ.500 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.75 ஆகவும், டீசல் விலை ரூ.65 ஆகவும் குறைக்கப்படும். தமிழ்நாட்டு மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள் என்பதை மக்கள் தேர்தலின்போது மோடிக்கு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2021ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார் மு.க.ஸ்டாலின். ஆனால், தவழ்ந்து முதல்வரானவர் ஒருவர் இருக்கிறார். தவழ்ந்து சென்ற புகைப்படத்தை காட்டியதால் எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது கோபம் வருகிறது. உதயநிதிக்கு வேறு வேலையே இல்லை என்கிறார். கடந்த முறை 39 தொகுதிகளை வென்றோம். இந்த முறை 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.