Sunday, September 1, 2024
Home » கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மறுத்த உத்தரவு செல்லும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி வழக்கு தள்ளுபடி: ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மறுத்த உத்தரவு செல்லும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி வழக்கு தள்ளுபடி: ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

by Karthik Yash

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் வடக்கு மாட வீதியில் உள்ள அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 2,779 சதுர அடி நிலம் சென்னை உரிமையியல் நீதிமன்ற தீர்ப்பின்படி, சித்திஹா என்ற பெண்மணிக்கு விற்கப்பட்டுள்ளது. சித்திஹா தரப்பில் அந்த நிலத்தை திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரிக்கு விற்பனை செய்ய பத்திரப்பதிவுத் துறையை அணுகிய போது, கோயில் தொடர்புடைய சொத்துக்களை பத்திர பதிவு செய்யக்கூடாது என்று பத்திரப்பதிவுத் துறை மறுத்து விட்டது.

இதையடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்து பத்திரப்பதிவு செய்யுமாறு உத்தரவிட கோரி ஆர்.பி.சவுத்ரி, மற்றும் சித்திஹா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கோயிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பான பத்திரப்பதிவை ஏற்க மறுத்த பதிவுத்துறை உத்தரவு செல்லும் எனக் கூறி சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் சித்திஹா ஆகியோர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யக் கோரி சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மற்றும் சித்திஹா ஆகியோர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், கூடுதல் அரசு பிளீடர் யு.பரணிதரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘கோயில் நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்ய அனுமதித்து உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விற்பனை பத்திரப்பதிவும் செல்லாது. கோயில் நிலங்கள் அபகரிப்பு, ஆக்கிரமிப்புகளை தடுக்க அரசும், அறங்காவலர்கள் குழுவும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு ஆர்.பி.சவுத்ரி மற்றும் சித்திஹா ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

You may also like

Leave a Comment

3 + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi