Wednesday, May 22, 2024
Home » திருக்கோயில்களில் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கிய மற்றும் முன்னோடித் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

திருக்கோயில்களில் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கிய மற்றும் முன்னோடித் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

by MuthuKumar

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (27.06.2023) ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் நிறைவேற்றப்பட்டு வரும் முக்கிய மற்றும் முன்னோடித் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் 2021 – 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு (Master Plan) பணிகளின் கீழ் பெரியபாளையம், அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் ரூ.170.11 கோடி மதிப்பீட்டிலும், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.306.35 கோடி மதிப்பீட்டிலும், இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.159.83 கோடி மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ரூ.78.20 கோடி மதிப்பீட்டிலும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.103.70 கோடி மதிப்பீட்டிலும், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.64.65 கோடி மதிப்பீட்டிலும், கடலூர், அருள்மிகு திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ரூ.99.90 கோடி மதிப்பீட்டிலும், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ரூ. 99.98 கோடி மதிப்பீட்டிலும், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.78.55 கோடி மதிப்பீட்டிலும், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ.68.30 கோடி மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும்,

2023 – 2024 ஆம் ஆண்டு அறிவிப்புகளின்படி, அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சிறுவாபுரி, அருள்மிகு பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருச்சி மாவட்டம், குமாரவயலூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் ரூ. 200 கோடி மதிப்பீட்டிலும் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு (Master Plan) பணிகளின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சிறப்பு திட்டங்களான தமிழ் மூதாட்டி ஔவையாருக்கு மணி மண்டபம் அமைத்திடும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், துளசியாப்பட்டினம், அருள்மிகு ஔவையார் விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.18 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள், மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் சார்பில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையம், சோளிங்கர், அருள்மிகு இலட்சுமி நரசிம்மர் திருக்கோயில் சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மனநல காப்பகம், வான்புகழ் வள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மயிலாப்பூர், அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் திருப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் சார்பாக பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கு ரூ.34 கோடி மதிப்பீட்டிலும், கோவை மாவட்டம், அனுவாவி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு ரூ.16 கோடி மதிப்பீட்டிலும், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலுக்கு ரூ.14.80 கோடி மதிப்பீட்டிலும், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், திருநீர்மலை அருள்மிகு அரங்கநாதப் பெருமாள் திருக்கோயிலுக்கு ரூ.9.50 கோடி மதிப்பீட்டிலும் கம்பிவட ஊர்தி அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலர் டாக்டர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை சிறப்புப் பணி அலுவலர் ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., ஆணையர் க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் அ.சங்கர், இ.ஆ.ப., ந.திருமகள், சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi