திருமலை: தெலங்கானாவில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற பைப் லோடு லாரியில் ரகசிய அறை அமைத்து எடுத்துச் செல்லப்பட்ட ரூ8.9 கோடி பணம் பறிமுதல் செய்து, 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில் பேரவை, மக்களவை தேர்தல்களையொட்டி மாநிலம் முழுவதும் காவல்துறையினர் சிறப்பு சோதனை சாவடிகளை அமைத்து தீவிர வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே போலீஸ் சோதனையில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்படுகிறது. இந்நிலையில் தெலங்கானா- ஆந்திரா எல்லையான என்.டி.ஆர். மாவட்டம், ஜக்கைப்பேட்டை மண்டலம் கரிகாபாடு மாநில எல்லை சோதனை சாவடியில் நேற்று தேர்தல் பறக்கும்படையுடன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் லாரியில் பைப் லோடு இருந்தது. இவை தெலங்கானா மாநிலம் மெதக்கில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூருக்கு ஏற்றி செல்வது தெரிய வந்தது. மேலும் போலீசாருக்கு சந்தேகம்படும் வகையில் லாரியின் கேபின் பின்புறம் ரகசிய அறை இருப்பதை கவனித்த போலீசார் அதில் சோதனை மேற்கொண்டனர். அதில் 5 பெட்டிகளில் ரூ8.39 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவற்றை அரசு கருவூலத்திற்கு கொண்டு சென்று வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இந்த பணம் யாருடையது, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து லாரியில் வந்த இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.