ஹைதராபாத் : தெலங்கானா அரசின் உறுதியான நடவடிக்கைகளால் அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் 7 மாதங்களாக கிடப்பில் வைத்து இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். தெலங்கானாவில் கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இவற்றிற்கு ஒப்புதல் அளிக்காமல் 7 மாதங்களாக ஆளுநர் தமிழிசை கிடப்பில் போட்டு இருந்தார். தெலங்கானா அரசு தரப்பில் பல முறை வலியுறுத்தியும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து தெலங்கானா அரசு தரப்பில் ஆளுநர் தமிழிசைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக ஆளுநர் தமிழிசை கிடப்பில் வைத்து இருந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து இருந்த தகவல் தெரியவந்துள்ளது. மேலும் 2 மசோதாக்கள் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி இருப்பதாக விளக்கம் அளித்த ஆளுநர் மாளிகை, மற்ற மசோதாக்களின் நிலை குறித்தும் விரிவான விளக்கத்தை தெலங்கானா அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாட்டை போல தெலங்கானா அரசின் உறுதியான நடவடிக்கைகளால் அம்மாநில ஆளுநரும் பணிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.