பூர்ணியா: ‘ஜன் பிஸ்வாஸ்’ யாத்திரையின் போது தேஜஸ்வியின் கான்வாய் வாகனம் மோதி டிரைவர் பலியான நிலையில், மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். லோக்சபா தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், பீகார் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ், ‘ஜன் பிஸ்வாஸ்’ என்ற யாத்திரையை தொடங்கி உள்ளார். பூர்ணியாவில் இருந்து கதிஹார் நோக்கி அவரது யாத்திரை வாகனம் சென்று கொண்டிருந்தது. நேற்றிரவு 11.30 மணியளவில் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள பெலாரி அருகே சென்று கொண்டிருந்த தேஜஸ்வியின் கான்வாய் வாகனம் மீது, எதிர் திசையில் இருந்து வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீஸ் கான்வாய் ஓட்டுநர் முகமது ஹலீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் 3 போலீசார் காயம் அடைந்தனர். எதிர் திசையில் வந்த காரில் இருந்த 4 பேரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் பூர்ணியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், விபத்தின் போது தேஜஸ்வியின் கார் கான்வாய்க்கு பின்னால் சென்றதால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போலீஸ் விசாரணையில், பூர்ணியா-கதிஹார் தேசிய நெடுஞ்சாலையில் தேஜஸ்வியாத்திரை சென்றபோது, திடீரென போலீஸ் கான்வாய் வாகனம் தவறான திசையில் சென்றது. அதனால், கதிஹார் பகுதியில் இருந்து வந்த கார் மீது கான்வாய் வாகனம் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது.