ஜெய்சல்மார்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மாரில் இந்திய விமான படைக்கு சொந்தமான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போர் விமானம் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது தேஜஸ் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனையடுத்து காளா குடியிருப்பு பகுதி அருகே விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை. அதில் இருந்த விமானி பாதுகாப்பாக வெளியேறினார்.
தேஜஸ் போர் விமான விபத்தை இந்திய விமான படையும் உறுதி செய்துள்ளது. மேலும் விபத்து குறித்த காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாவது இதுவே முதல் முறையாகும். ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனத்தில் முப்படைகளின் ஒருங்கிணை ராணுவ பயிற்சி பாரத் சக்தியை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். ராணுவ உயரதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். இங்கிருந்து 100கி.மீ. தொலைவில் தான் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது.