விருதுநகர்: சாத்தூர் அருகே பாஜ ஊராட்சி தலைவர், செயலாளர் வீடுகளில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 4 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, மேட்டமலை கிராமத்தில் பாஜவை சேர்ந்த பார்த்தசாரதி ஊராட்சி தலைவராக உள்ளார். இவர் புதிதாக வீடு கட்டுவோருக்கு அனுமதி வழங்கவும், புதிதாக பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்கவும் அதிக பணம் கேட்பதாகவும், ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். காலை 8 மணிக்குத் துவங்கி சுமார் 3 மணிநேரம் நடந்த சோதனையின் முடிவில் 4 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்.