நெல்லை: நெல்லை டவுனில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை குத்திக் கொன்ற வழக்கில் கைதான 17 வயது சிறுவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்த வீடியோவை வெளியிட்ட பெண் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை அருகே திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த இளம்பெண் சந்தியா (18) கடந்த 5 நாட்களுக்கு முன் டவுனில் உள்ள குடோனில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தன்னை காதலிக்க மறுத்ததால் அவரை கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர், தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர் கழுத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அவரை கைது செய்த இடத்தில் இருந்து போலீசார் விசாரணை நடத்தியது, தற்கொலை முயற்சியை தடுத்தது வரை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்த வீடியோக்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அந்த வீடியோ காட்சிகள் யார் மூலம் வெளியானது என விசாரணை நடத்தினர். அப்போது, சந்தியாவை கொலை செய்துவிட்டு மூன்றடைப்பு காட்டு பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டது மூன்றடைப்பு காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் ஏட்டு ஜெயராணி என்பது தெரியவந்தது. இதனால் ஏட்டு ஜெயராணியை சஸ்பெண்ட் செய்து நெல்லை எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.