ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சகோதரி முறையான பெண்ணை காதலித்து விட மறுத்தால் உறவினர்கள் தாக்கியதில் வாலிபற் சுயநினைவை இழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஸ்ரீபெரும்புத்தூர் அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் மகன் நிரஞ்சன் (21). டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த ரம்யா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த காதல் விவகாரம் ரம்யாவின் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த ரம்யாவின் பெற்றோர், ரம்யா மற்றும் நிரஞ்சன் இருவருக்கும் அண்ணன் – தங்கை உறவுமுறை என கண்டித்துள்ளனர். இதனையடுத்து ரம்யா, பெற்றோரின் எதிர்ப்பை மீறி தானாக புறப்பட்டு நிரஞ்சன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற ரம்யாவின் உறவினர்கள், சமாதனம் செய்து ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர். இதனால், ரம்யாவின் பெற்றோர் அவரை திருவள்ளூர் மாவட்டம், புள்ளரம்பாக்கத்தில் உள்ள ரம்யாவின் பாட்டி வீட்டில் தங்க வைத்திருந்தனர். இதனையறிந்து நிரஞ்சன், புள்ளரம்பாக்கம் சென்று ரம்யாவை சந்தித்துள்ளார். இந்த தகவல் ரம்யாவின் தாய் மாமன்களான புகழேந்தி மற்றும் ஜனார்த்தனன் இருவரும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நிரஞ்சன் வீட்டிற்கு சென்று அவரை கட்டை மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நிரஞ்சன் சுயநினைவை இழந்து, தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.