கூடலூர், மே 15: கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியில் நடமாடும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அம்பலவயல் சுற்றுவட்டார பகுதிகளில் 2 கரடிகள் நடமாடி வருகிறது. இது பகல் நேரத்திலும் சாலைகளில் நடமாடுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தேயிலை மற்றும் காப்பி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். தேயிலை தோட்டங்கள் காபி தோட்டங்களுக்கு இடையே கரடிகள் புகுந்தால் அங்கு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் நடமாடும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.