செய்யூர்: செய்யூர் அருகே வீட்டில் உள்ள மின் பெட்டியை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் பிருத்விராஜ் (27), கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால், வீட்டில் உள்ள மெயின் பாக்ஸை திறந்து பார்த்து அதில் உள்ள வயர்களை சரிப்படுத்தியதாக தெரிகிறது.
அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பிருத்விராஜை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அதற்குள் பிருத்விராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த செய்யூர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.