தாரமங்கலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்து செல்லும் மாணவிகளை காலை-மாலை வேளையில் இளைஞர்கள் சிலர் வழிமறித்து கேலி -கிண்டல் செய்வதாகவும், காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்து வருவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து மாணவிகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, பள்ளிக்கு அருகில் நின்றிருந்த இளைஞர்கள் சிலர், மாணவிகளை கேலி-கிண்டல் செய்துள்ளனர்.
இதனைக்கண்ட அந்த மாணவிகளின் வகுப்பு தோழர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், அவர்களுக்குள் கைகலப்பாக மாறியது. இளைஞர்களுக்கு ஆதரவாக அப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களும் சேர்ந்து அடி -தடியில் இறங்கினர். ஒருவரைெயாருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அதனைக்கண்டு மாணவிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
மாணவர்கள் அடித்துகொள்வதை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அதனை பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி கண்டிக்குமாறு கூறியுள்ளனர். இதனால் மோதிக்கொண்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மறுநாள் பள்ளி முன் திரண்ட 100க்கும் மேற்பட்டோர் தகராறில் ஈடுபட்டனர். அவர்களும் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டனர். இதில், 4 பேருக்கு மண்டை உடைந்தது. காயமடைந்த இரு தரப்பினரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.