Saturday, May 11, 2024
Home » மாணவர்கள், பொதுமக்களுக்கு ஆதரவு என்ற பெயரில் கலவரத்தை தூண்டிய ஆசிரியை சஸ்பெண்ட்: தமிழக அரசு அதிரடி

மாணவர்கள், பொதுமக்களுக்கு ஆதரவு என்ற பெயரில் கலவரத்தை தூண்டிய ஆசிரியை சஸ்பெண்ட்: தமிழக அரசு அதிரடி

by Ranjith

சென்னை: கலவரத்தை தூண்டும் வகையிலும், போராட்டத்தை தூண்டும் வகையிலும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாட பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி.

இவர், கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் அரசுக்கும், கல்வித்துறைக்கும் எதிராக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். அதில் பல பதிவுகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை போராட்டத்தை தூண்டும் வகையிலும், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட தூண்டும் வகையிலும் உள்ளது. சமூகங்களுக்கு எதிராகவும் கருத்துக்களை தொடர்ந்து கூறி வந்துள்ளார். இது குறித்து சமூக ஆர்வலர்களும், அமைப்புகளும் அரசிடம் புகார் செய்தனர்.

இதை தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. விசாரணை நடத்திய அதிகாரிகள், அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் அவரது பதிவுகள் இடம்பெற்று இருந்ததைக் கண்டு திடுக்கிட்டனர். ஒரு ஊழியர் நடத்தை விதிகளை மீறி நக்சலைட் போல செயல்பட்டு வந்தது தெரிந்தது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: உமாமகேஸ்வரி தனது சமூக வலைதள பதிவில் கடுமையான சொற்களை பயன்படுத்தி எழுதி வந்துள்ளார். உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

விடியற்காலை, சுமார் 3 மணியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகே மக்கள் சாலை மறியல். பேருந்துகள் சென்னை நோக்கியோ, கூடுவாஞ்சேரி நோக்கியோ போக இயலவில்லை. இதேபோல கல்விப் பிரச்னைகளுக்கு மக்கள் மறியல் செய்ய ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று வன்முறையை தூண்டும் வகையில் எழுதியுள்ளர். மேலும், மாவட்டம் தோறும் பெற்றோர்களை சந்திக்கிறோம் என்று விழா எடுத்து வருகிறார்களே, அதற்கு ஆசிரியர்களை வரவழைக்கிறார்களே, கலைத் திருவிழா நடத்துகிறார்களே, அதற்கு ஆசிரியர்களை அனுப்புகிறார்களே, அப்போது கல்வி பாதிக்கப்படாதா என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கேட்கிறார்.

இது நியாயமான கேள்விதான். சமவேலைக்கு சம ஊதியம் என்பது அனைவருக்குமான சமூக நீதி. அதை வழங்க இத்தனை இடையூறுகளை உருவாக்குகிறதே துறையும், அரசும். உழைக்கும் ஆசிரியர்களை மதிக்காமல், அந்த ஆசிரியர்களின் ஊதியத்தில் நீதியை நிலைநாட்டாமல் அவர்கள் வயிற்றில் அடிப்பது எந்த விதத்தில் சமூகநீதி? புதிய கல்விக் கொள்கைதான் நமது மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மையை கல்வி அமைச்சர் வெளிப்படையாக அறிவித்து விடலாம், ஒவ்வொரு நாளும் புதிய, புதிய சுற்றறிக்கைகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இவை அனைத்தும் தேசியக் கல்விக் கொள்கை 2020ல் இருப்பவையே. மாநில அரசுகளும் இவற்றை தடுக்க மறுக்கின்றன. இதை தடுக்கும் வேலையை அமைப்புகள் செய்ய முன் வரவேண்டும். தடம் மாறி, தடுமாறும் தமிழகக் கல்வி செயல்படுகிறதா கல்வி அமைச்சகம்? அதிகாரிகளுக்கும் பங்கு உண்டா?. தமிழகக் கல்வி சூழல் தடம் மாறி தடுமாறுகிறதா? விரைவில் அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா.
தமிழக கல்விச் சூழல் மரண ஓலம்.

ஆங்கில வழிக் கல்வியால் அவதியுறும் மாணவர்கள், பெற்றோர்கள் மீதே பழியைப் போட்டு ஆங்கில வழி வகுப்புகளை ஆட்டு மந்தைக் கூட்டமாக மாற்றும் பள்ளிகள். புத்தகங்கள் மட்டுமே மாணவர்களிடம் ஆங்கில வழியில் இருக்கின்றன. அவர்கள் சிந்தனையற்றவர்களாக மாற்றப்படும் அவலம். தேர்தல் நடத்துவது செலவுதானே. அதனால அரசியல்வாதிகளையும் அவுட்சோர்சிங்ல நியமிச்சிக்கலாமா… மக்களே… சரிதானா… எல்லா ஆசிரியர்களும் லட்சத்தில் சம்பளம் வாங்குவதில்லை ஆயிரங்களுக்கே போராடும் நிலையில் ஆசிரியர்கள்.

இவ்வாறு அரசுக்கு எதிராக தொடர்ந்து 34க்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் சங்கங்கள், மாணவர்கள், பொதுமக்களை போராட தூண்டும் வகையில் பதிவுகள் உள்ளன. இவ்வாறு செயல்படும் ஒரு ஆசிரியை, மாணவர்களையும் போராட்டக் களத்தில் இறக்கிவிட்டால், மாணவர்களின் வாழ்க்கை என்ன ஆகும்.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு, ஆசிரியை உமாமகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. விஷம் என்றால், அதற்கு மருந்து கொடுத்துத்தானே ஆக வேண்டும். தற்போது அரசு அதற்கான மருந்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

1 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi