சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற காலம் கொரோனா பேரிடர் நிதி நெருக்கடி மிகுதியாக இருந்த காலம். கடந்த ஆட்சியில் அரசு ஊழியர் ஆசிரியர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு போன்றவை முடக்கி வைக்கப்பட்டிருந்தது. அப்போதும் 14% ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாக உயர்த்தி வழங்கி, அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியதாரர்களை இன்ப கடலில் ஆழ்த்தினார்.
இதை தொடர்ந்து தற்போது முதல்வர், தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்திருக்கிறார். இதனால் 16 லட்சம் பேர் பயனடைய உள்ளார்கள். அவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை முதல்வர் ஏற்படுத்தி உள்ளார். இதிலிருந்து என்றென்றைக்கும் ஆசிரியர் அரசு ஊழியர்களின் பாதுகாவலன் திமுக அரசுதான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்துதல் மற்றும் கடந்த ஆட்சிக்காலத்தில் முடக்கி வைக்கப்பட்ட அரசு ஊழியர் ஆசிரியர்களின் சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் விரைவாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்கிய முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கோடானு கோடி நன்றி.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.