சென்னை: டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. தமிழகத்தில், மது விற்பனையானது டாஸ்மாக் நிறுவனம் மூலம் சில்லறையாகவும் மொத்தமாகவும் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 5,329 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நிலையில் அதில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு சமீபத்தில் மூடப்பட்டது.
இதனிடையே, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயித்த விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்படும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ், அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மது விற்பது குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில், டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் உள்ளிட்டவற்றின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியது. அதன்படி, குவார்ட்டருக்கு ரூ.10, முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் மட்டுமல்லாது தனியார் பார்கள், கிளப்களிலும் வெளிநாட்டு மதுவகைகளின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மது அருந்துபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.